Tuesday, August 30, 2016

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?
-----------------------------------------------------------------------
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.
பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும்.
ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம், கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால், முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு, மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது.
நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல் தேய்த்த பின், ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.
காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும்.
காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும். இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும் தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது. ஏனெனில் அது அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும்.
சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.
நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்!

No comments:

Post a Comment